வன்னியின் இறுதிப்போரின் அடையாளமாக விளங்குகின்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் பிறந்து போருக்குள்ளேயே வாழ்ந்த யேசுரட்ணம் சிறீ என்ற மாணவன் யாழ்.பல்கலைக்கழகத்தின் உயரிய விருதாகிய துரைராஜா விருதினை வென்று சாதனை படைத்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் கல்வி, விளையாட்டு தலைமைத்துவம் முதலிய பல துறைகளிலும் சிறப்பாக செயற்பட்ட மாணவர்களில் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு யாழ் பல்கலையின் உயரிய விருதாகிய துரைராஜா விருது வழங்கப்படுவது வழக்கமாகும்.
அதன் அடிப்படையில் எதிர்வரும் 24 மற்றும் 25 ம் திகதிகளில் யாழ் பல்கலையின் 35வது பொதுப்பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது. குறித்த பட்டமளிப்பு விழாவில் துரைராஜா விருது துணைவேந்தரால் வழங்கப்படும்.
முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலிருந்து பல்கலைக்கு தெரிவாகி ஊடகத்துறையில் சிறப்புக்கலைமாணி பட்டத்தை பெற்று வெளியேறவுள்ள யேசுரட்ணம் சிறீ என்ற மாணவனுக்கே இந்த ஆண்டுக்கான துரைராஜா விருதினை வழங்க யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இறுதி யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இறுதியாக மீள்குடியேறி பின்னர் பல்கலைக்கழகம் வந்து குறித்த வெற்றியினை அம்மாணவன் பெறவுள்ளார்.
குறித்த விருதினை பெற்றுக்கொள்வதற்காக 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்தமையும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு